பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: 80 குழந்தைகள் தப்பினர்
திருத்தணி: திருத்தணியில் பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவு காரணமாக தீ பற்றியது. இது அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியது மாணவர்கள் அனைவரும் வெளியே ஓடியதால் எந்த வித ஆபத்தும் இன்றி உயிர்தப்பினர்.
திருத்தணி ஒன்றியம், செருக்கனூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 80 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்காக, பள்ளி அருகில் உள்ள சமையல்கூடத்தில் மதிய உணவு சமைக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு, சமையல்கூடத்திற்கு சென்ற அம்பிகா மற்றும் சின்னபொன்னு என்ற இரு ஊழியர்கள், சமையலுக்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது திடீரென அறை முழுவதும் தீ பற்றியது. ஊழியர்கள் இருவரும் அலறி அடித்து ஓடினர்.
புகை வந்ததை பார்த்த பள்ளி குழந்தைகளும் வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்த திருத்தணி தீ அணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 80 குழந்தைகளும் தப்பி உள்ளனர். கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.