காலிங் பெல் அடிக்குதாம்.. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா ஆவி சுத்துதாம்.. தாயத்துடன் வலம் வரும் போலீஸ்!!
திருச்செங்கோடு: தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் வீட்டில் திடீர் திடீரென்று காலிங் பெல் சத்தம் கேட்பதால் பீதியடைந்த போலீசார் மந்திரித்து கயிற்றை கைகளில் கட்டிக் கொண்டு பணிக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு பிரியாவின் தற்கொலையால் சர்ச்சையை சந்தித்த நாமக்கல் எஸ்.பி. செந்தில் குமார் இப்போது தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஷ்ணுபிரியாவின் வீட்டில் ஒலித்த காலிங் பெல்லிற்கும் இந்த இடமாற்றத்திற்கும் சம்பந்தம் எதுவும் உள்ளதா என்றும் குழம்பிப் போயுள்ளனர் போலீசார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா அலுவலகம் பின்புறத்தில் டிஎஸ்பி கேம்ப் ஆபீஸ் உள்ளது. கீழ் தளத்தில் வீடும், மேல்தளத்தில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. கீழ்தளத்தில் உள்ள அதிகாரிகளின் தேவைக்காக, உதவியாளர்களை அழைப்பதற்கு கீழ்தளத்தில் காலிங் பெல் பெருத்தப்பட்டுள்ளது.
விஷ்ணுபிரியா தற்கொலை
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயரதிகாரி நெருக்கடி
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விஷ்ணுபிரியாவிற்கு உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மகளின் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆமை வேகத்தில் வழக்கு விசாரணை
மகளின் மரணத்திற்குக் காரணமாக உயரதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனினும் விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்க விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. விஷ்ணு பிரியாவின் செல்போன் பேச்சுக்களை வைத்து அவருடன் பேசியவர்களை சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர்.
காலிங் பெல் சத்தம்
விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட நாளில் இருந்து அவர் தங்கியிருந்த வீடு பூட்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.10 மணியளவில், பூட்டிய வீட்டில் இருந்து தானாகவே காலிங் பெல் அடித்துள்ளது.
பீதியில் போலீசார்
சத்தம் கேட்டதும் அலுவலக ஊழியர்கள் மின் கோளாறாக இருக்கும் என்று விட்டுவிட்டனர். 5 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் காலிங் பெல் அடித்துள்ளது. உடனே அலுவலக ஊழியர்கள் கீழ்தளத்தில் வந்து பார்த்தனர். ஆனால், வீடு பூட்டிய நிலையிலேயே இருந்ததால் பீதியடைந்தனர்.
தற்கொலை செய்த அதே நேரத்தில்
காலிங்பெல் அடித்த அதே நேரத்தில், எஸ்பி செந்தில்குமாருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியும் வெளியானது. நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறையினரின் பீதியை அதிகரித்துள்ளது. ஏனெனில் காலிங் பெல் அடித்த மாலை 5.15 மணி என்பது, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நேரமாகும்.
கையில் மந்திரித்த கயிறு
பூட்டியிருக்கும் வீட்டில் உள்ள காலிங் பெல் தானாக அடித்ததால், பீதியடைந்த போலீஸ் அதிகாரிகள் தற்போது மந்திரித்த கயிற்றை கட்டிக்கொண்டு பணிக்கு வருகின்றனர். ஒருவேளை விஷ்ணுபிரியாவின் ஆவி வீட்டை சுற்றி வருகிறதோ என்று கதிகலங்கிப் போயுள்ளனர்.
அடடா தமிழ் சினிதாவிற்கு நல்ல பேய் கதை கிடைச்சிருச்சே! நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை!!