‘தண்ணீ’யில் தண்ணீர் கலந்த கில்லாடிகள்... டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் உட்பட 18 பேர் கைது
செஞ்சி: செஞ்சி அருகே மதுப் பாட்டிலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த 3 டாஸ்மாக் ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர், மேல்களவாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அம்மாவட்ட ‘டாஸ்மாக்' மானேஜர் ஜெயராஜ் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது, மேல்மலையனூரில் உள்ள 2 கடைகளிலும், மேல்களவாயிலில் உள்ள ஒரு கடையிலும் மதுபாட்டில்களில் மதுவுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக போலீசில் ஜெயராஜ் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், மேல்மலையனூர் கடைகளின் விற்பனையாளர்கள் முனியநாயகம் (40), ரவிசங்கர் (40) ஆகியோரையும், மேல்களவாயில் கடை விற்பனையாளர் மோசேஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் செஞ்சி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் மேற்பார்வையில் கலால்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சுரேஷ், இளங்கோ மற்றும் போலீசார் தீவிர மதுவேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது முறைப்படி டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே அனுமதியின்றி பெட்டிக்கடைஉள்ளிட்ட பல இடங்ளில் மது விற்கப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பேரில் செஞ்சி பகுதியை சேர்ந்த குமார் (32), அரியலூர் பகுதியை சேர்ந்த அர்ச்சுணன் (36) மற்றும் கார்த்திக்கேயன் (32) துரை (47) உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.