காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 2 பேர் வாசனுக்கு ஆதரவு?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள ஜி.கே.வாசனுடன் பட்டுக்கோட்டை ரங்கராஜன், குளச்சல் பிரின்ஸ் தங்கம் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் இணைவது உறுதியாகி உள்ளது. கிள்ளியூர் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் ஊசலாட்டத்தில் இருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜி.கே.வாசன். இவரது தந்தை மூப்பனார் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவரது மறைவிற்கு பிறகு 2002-ம் ஆண்டு ஜி.கே. வாசன் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் அவருக்கும் காங்கிரஸ் மேலிடத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
3 எம்.எல்.ஏக்கள்
தமிழகத்தில் குமரி மாவட்டம்தான் காங்கிரசின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் இங்கு உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. கடந்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே கணிசமான வாக்குகளை பெற்று 2-வது இடத்தை கைப்பற்றியது.
குமரி ஆதரவு கிடைக்குமா?
1996-ல் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியபோது, குமரி மாவட்ட காங்கிரசார் அவருக்கு ஆதரவு அளித்தனர். இப்போது ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினால் அவருக்கு அதே ஆதரவு கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
விஜயதாரணி மறுப்பு
இது குறித்து விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதரணி கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் 26 ஆண்டுகளாக இருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு பிறகே எம்.எல்.ஏ. ஆகி உள்ளேன். கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மட்டுமே கட்டுப்படுவேன்.
தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு முழு ஆதரவு ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். கட்சி மேலிடம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி உள்ளார். அந்த கருத்தை மேலிடத்திடம் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியில் அவர் நீடிக்க வேண்டும் என்றார்.
இதன் மூலம் அவர் ஜி.கே.வாசனுடன் வெளியேறப் போவதில்லை என்று திட்டவட்டமாகியுள்ளது.
ஜான் ஜேக்கப் ஊசலாட்டம்
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இந்த கட்சியை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட மாட்டேன்.
எந்த முடிவையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என எடுத்து விட முடியாது. என்னை யாரும் சென்னைக்கு அழைக்கவில்லை. நானும் சென்னை செல்வதாக இல்லை என்று கூறியுள்ளார்.
பிரின்ஸ் எஸ்கேப்
ஆனால் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கம் கூறுகையில், சென்னையில் வாசனை சந்தித்து பேச உள்ளேன். அதன் பிறகு குமரி மாவட்ட தொண்டர்கள், ஆதரவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வேன் என்றார்.
பட்டுக்கோட்டை ரங்கராஜன்
இவர்களைத் தவிர பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. ரங்கராஜன், தீவிர வாசன் ஆதரவாளர்கள். அவர் வாசனுடன் இணைவார். மற்றொரு எம்.எல்.ஏ. ஓசூர் கோபிநாத் வாசன் அணியில் இணையமாட்டார்.
இதன் மூலம் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் இருவர் வாசன் அணியில் இணைவது உறுதியாகி உள்ளது. கிள்ளியூர் ஜான் ஜேக்கப் ஊசலாட்டத்தில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications