அவரே காரில் தனியாக "வாக்கிங்" போகிறார்.. யாருடனோ "டாக்கிங்" பண்ணுகிறார்... வாசன் போக்கே புரியலையே!
சென்னை: ஜி.கே.வாசன் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார். இதுவும், மக்கள் மனதைக் கவ்வி வரும் அரசியல் குழப்பங்களில் ஒன்று. கூட்டணி குறித்து தெளிவாக இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார் வாசன். அதேசமயம், அவரது கட்சியினர் அதிமுகவுடன்தான் நிச்சயம் கூட்டணி என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அதிமுகவிடமிருந்து இன்னும் ஜி.கே.வாசனுக்கு முறைப்படி அழைப்பு வரவில்லையாம். இதற்குக் காரணம், அவருடன் ரகசியமாக நடந்து வரும் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லையாம். அது முடிந்த பிறகுதான் அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு அழைப்பு வருமாம்.
அதேசமயம், கூட்டணி தொடர்பான பேச்சுக்களை நேரடியாக வாசனே கையில் எடுத்துள்ளாராம். அவரே எதிர்த் தரப்பினருடன் பேசி வருவதாக சொல்கிறார்கள்.

முதல் தேர்தல்
தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் ஜி.கே.வாசன் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற வாசன் தீவிரமாக உள்ளார்.

அடித்தளம்
இதில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தால்தான் எதிர்காலம் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் மீண்டும் காங்கிரஸிடம் தஞ்சம் புகும் அவல நிலை ஏற்படலாம் என்பதை வாசன் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.

வெற்றிக் கூட்டணி
இதன் காரணமாகவே அவர் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற விரும்புகிறார். தற்போதைய நிலையில் வாக்குச் சிதறல்களுக்கு தமிழகத்தில் பிரமாதமான வாய்ப்புகள் உருவாகியிருப்பதால் அதிமுக பக்கம் சேரவே வாசனும், அவரது கட்சியினரும் ஒரு சேர விரும்புகின்றனர்.

சீட் பிரச்சினை
இதனால் அதிமுக தரப்புடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் கூட்டணிக்கு சிக்கல் இல்லை என்றும் வாசன் கேட்கும் சீட்டுகள்தான் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.

20+ கேட்கிறார் வாசன்
20க்கும் மேற்பட்ட சீட்டுகளை வாசன் கேட்கிறாராம். ஆனால், உங்களுக்குத்தான் சைக்கிள் சின்னம் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாக இல்லை. எனவே எதற்கு இத்தனை சீட். வேண்டுமானால் இரட்டை இலையில் நில்லுங்கள் தருகிறோம் என்று அதிமுக தரப்பு கூறுகிறதாம். அதை வாசன் ஏற்கவில்லையாம்.

விரைவில் அறிவிப்பு
இருப்பினும் இது மட்டும்தான் பிரச்சினையாக இருப்பதால் விரைவில் இதையும் சரி செய்து கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று தமாகாவில் உறுதியாக சொல்கிறார்கள்.

வாசனே நேரில் பேச்சு
மேலும் வாசன் கூட்டணி குறித்த பேச்சுக்களை தானே நேரடியாக மேற்கொள்கிறாராம். இதுதொடர்பாக வெளியே போகும்போது காரை தானே தனியாக ஓட்டிச் செல்கிறாராம். எனவே பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் படு ரகசியமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications