ஒரு வழியாக ஜெ.வை இன்று சந்திக்கிறார் ஜி.கே. வாசன்?
சென்னை: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், பிரச்சாரம் என பம்பரமாக சுழன்று வருகின்றன.
ஏற்கனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணியும், மக்கள் நலக்கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய ஒரு கூட்டணியும் உருவாகியுள்ளன. பாஜக இன்னும் தங்களது கூட்டணி குறித்து தெளிவாக எதுவும் கூறவில்லை. பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் மாநிலக் காங்கிரஸ், அதிமுகவுடன் அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேரலாம் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில், இன்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்து இன்று பேசுவார் எனத் தெரிகிறது.
தமாகா மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்களின் விருப்பத்தின் பேரில் அக்கட்சி அதிமுக கூட்டணிக்கு செல்வதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குகிறார்களோ, அதே அளவு ‘சீட்‘ தமாகாவுக்கு அதிமுகவில் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனராம்.
இதன்படி, குறைந்தபட்சம் 15 தொகுதியில் இருந்து 24 தொகுதியாவது கிடைக்கும் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளதாம். ஆனால் அதிமுகவில் அவ்வளவு சீட் தமாகாவுக்கு ஒதுக்குவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் அதிமுக, திமுக-காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, பாஜக, பாமக என 5 முனை போட்டி உறுதியாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சைக்கிள் சின்னத்திற்காக போராடி வரும் தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான் ஜி.கே.வாசன் ஜெயலலிதா சந்திப்பு தள்ளிப்போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏறக்குறைய மற்ற கட்சிகளின் கூட்டணி முடிவாகி விட்டதால் அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்த ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் இன்று சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.