காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய வாசன் ஆதரவாளர் கைது
சென்னை: காஞ்சீபுரத்தில் நடந்த திருப்போரூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ஜி.கே. வாசன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டம் கானாத்தூரில் இருக்கும் காமராஜர் அரங்கில் நவம்பர் 17ம் தேதி மாலை நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மாவட்ட பொறுப்பாளர் வி.ஆர். சிவராமன், முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரபாணி ரெட்டியார் ஆகியோர் ஒரு காரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

கார் அரங்கம் முன்பு நின்றதும் அவர்களின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் உருட்டுக் கட்டையுடன் வந்து காரை அடித்தார். இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இதை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் ஏசுதாஸ் என்றும், முட்டுக்காட்டை சேர்ந்த அவர் ஜி.கே. வாசன் ஆதரவாளர் என்றும் தெரிய வந்தது. போலீசார் ஏசுதாஸை கைது செய்தனர். ஆனால் அவரை தூண்டிவிட்ட முட்டுக்காடு கிருஷ்ணன் என்பவரையும் கைது செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர். போலீசார் அவர்களிடம் சமாதானமாகப் பேசி மறியலை கைவிடச் செய்தனர்.
இந்நிலையில் செய்தி அறிந்து வாசன் ஆதரவாளர்களும் சம்பவ இடத்தில் கூடினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதுடன் காங்கிரஸ் ஊழியர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications