என்னதான் நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்... 32 ஆவது முறையாக விழுந்த மேற்கூரை!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 32 ஆவது முறையாக மேற்கூரைக் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல ஆயிரம் கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 10 முறை மேற்கூரைகளும் 9 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் என 31 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த உடைப்பு சம்பவங்களில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் இருந்து விமான நடைமேடை செல்லும் நுழைவு வாசல் 14 இல் இருந்து விமானத்திற்கு செல்லும் பகுதியில் இருந்த 9 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட கண்ணாடி கதவு நேற்று மாலை 3 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்தனர். இடிந்து விழுந்த கண்ணாடி சிதறல்களை அகற்றினார்கள்.