நிம்மதியாக இருக்கும் ஆடுகள் ... பயனற்றுக் கிடக்கும் ஆடறுப்பு கூடங்கள்
நெல்லை அருகே ஆடறுப்பு மனைகள் செயல்படாமல் முடங்கி கிடப்பதால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை: கடந்த சில மாதங்களாக ஆடறுப்பு கூடங்களுக்கு வியாபாரிகள் யாரும் வராததால் அந்த கூடமே பயனற்றுக் கிடக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு கடைகளிலேயே ஆடுகளை வெட்டுவதும், அவற்றின் கழிவுகளை ரோட்டில் கொட்டுவதாலும் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

இந்த சீர்கேடுகளை தவிர்க்கும் வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மேலப்பாளையம் சந்தை சாலையில் ஒருங்கிணைந்த ஆடறுப்பு மனை பெரிய கட்டடத்தில் திறக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் உள்ள ஆடுகள் அனைத்தும் இந்த கூடத்திற்கு கொண்டு வந்து வெட்டி இறைச்சிக்கு சீல் வைத்த பிறகே விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதற்காக அங்கு கால்நடை மருத்துவர் ஒருவரை நியமிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
ஆனால் இந்த திட்டத்துக்கு மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை, பாளை வியாபாரிகள் தினமும் அங்கு ஆடுகளை கொண்டு சென்றால் போக்குவரத்து செலவு அதிகம் ஆகும் என்று கூறினர்.
இதனால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு அந்தந்த மண்டலத்தில் ஆடறுப்பு மனைகள் நிறுவப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆடறுப்பு மனைக்கு வியாபாரிகள் வருவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆடறுப்பு மனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆடறுப்பு மனைக்கு வந்தால் நோயுள்ள ஆடுகளை வெட்ட முடியாது என்பதால் தான் வியாபாரிகள் வரமறுப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications