இந்த திருட்டுச் சம்பவத்துல ஒரு "ஹைலைட்" என்னென்னா...!
திண்டுக்கல்: 16 வயது சிறுவன். அவன் போலீஸில் சிக்கிக் கொண்டான். அவன் மீதான குற்றச்சாட்டு - ஆடு திருடியது + அத்தோடு நில்லாமல் ஆட்டைப் பறி கொடுத்தவரிடமே அவன் பைக்கில் லிப்ட் கேட்டதுதான்.
பிடிபட்ட சிறுவனை பொதுமக்கள் இரக்கமே இல்லாமல் தர்ம அடி கொடுத்து காயப்படுத்தி விட்டனர். அவனை மீட்ட போலீஸார் தற்போது சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஊர் - திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டிக்கு அருகே உள்ள என். பஞ்சம்பட்டி கிராமம்.
சம்பவம் - இந்தக் கிராமத்தில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள் கடந்த சில மாதங்களாக திருட்டுப் போய் வந்தனர். கிராம மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தும் கூட திருட்டு தொடர்ந்தது. பலவிதமாகமுயற்சி செய்தும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.
சவரிமுத்து வீட்டில் - இந்த நிலையில் இன்று அதிகாலையில் சவரி முத்து என்பவர் தனது வீட்டுக்குப் பின்புறம் போயுள்ளார். தொழுத்தில் கட்டியிருந்த ஆடு, மாடுகளை செக்கப் செய்து பார்த்தபோது மந்தையில் இருந்த ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
ஆட்டுச் சந்தை - இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை எழுப்பினார் சவரிமுத்து. அவர்கள், திண்டுக்கல்லில் இன்று ஆட்டுச் சந்தை. கண்டிப்பாக திருடன் அங்குதான் போயிருப்பான். வேகமாக போனால் பிடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பைக்கில் சேஸிங் - இதையடுத்து பைக்கை எடுத்த சவரிமுத்து திருடனைப் பிடிக்காமல் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் திண்டுக்கல்லுக்கு வண்டியை விட்டார். அவருடன் மேலும் சிலரும் பைக்குகளில் கிளம்பினர்.
அண்ணே, லிப்ட் - அப்போது வழியில் ஒரு 16 வயது சிறுவன் கையைக் காட்டி சவரிமுத்துவிடம் லிப்ட் கேட்டுள்ளான். அதிகாலை இருள் அது. சவரிமுத்துவும் சின்னப் பையன் கேட்கிறானே என நினைத்து வண்டியை நிறுத்தி ஏறச் சொன்னார்.
அட.. ஆடு - இதையடுத்து பைக்கில் ஏறிய சிறுவன் தனது ஆட்டையும் தன்னோடு வண்டியில் ஏற்றப் பார்த்தான். அப்போதுதான் அவன்தான் அந்த ஆட்டைத் திருடியவன் என்று தெரிய வந்தது. சவரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.
தர்ம அடி - இதையடுத்து அத்தனை பேரும் சேர்ந்து அந்த சிறுவனை சரமாரியாக அடித்தனர். அதில் அவன் காயமடைந்தான். உடனடியாக தகவல் தெரிந்து போலீஸார் வந்தனர். சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடு திருடிய சிறுவன், அதன் ஓனரிடமே லிப்ட் கேட்டு மாட்டிய சம்பவம்தான் பஞ்சம்பட்டி முழுவதும் பேச்சாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications