தூத்துக்குடியில் கார் மூலமாக ஆடுகள் திருட்டு... 3 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் காரில் போய் ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம், நாகலாபுரம், குளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போனது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஎஸ்பி தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் அங்கு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் இனஸ்பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் போலீசார் சுப்பிரமணியாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று, மீனாட்சிபுரம் அருகே வைத்து அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.
காரில் வந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் விளாத்திகுளம் பகுதியில் ஆடு திருடியவர்கள் என்பதும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த சதிஷ், ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஜெகதிஷ், ஈத்தாமொழியை சேர்ந்த சதிஷ் என தெரிய வந்தது. அவர்களுடன் வந்த தாராவிளை விஜயன் என்பவர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். மூன்று பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 ஆடுகள் மீட்கப்பட்டன. ஆடுகளை திருட பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.