மர்மாக உயிரிழந்த தலித் இளைஞர் கோகுல்ராஜை ஒரு கும்பல் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நாமக்கல்: திருச்செங்கோடு பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மர்மான முறையில் உயிரிழப்பதற்கு முன்பு அவரை ஒரு கும்பல் அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கடந்த 23-ந் தேதி நாமக்கல் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காதல் விவகாரத்தில்தான் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டதாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
கோகுல்ராஜின் உடலை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் குழு பிரேத பரிசோதானை செய்தது. இந்த அறிக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதியன்று திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு மாணவர் கோகுல்ராஜ் அவரது தோழியுடன் வருவதும், பின்னர் 11.53 மணிக்கு ஏழு பேர் கொண்ட கும்பல், அவர்களை வெளியே அழைத்து செல்வதும், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகளை தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குனர் ராமசாமி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர் கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்ட கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாள பகுதியிலும் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.