ஜெ.வின் கொடநாடு காவலாளி கொலையில் திருப்பம் - பதுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்கக் கட்டிகள் கொள்ளை?
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பங்களாவில் ஆவணங்கள், தங்கக் கட்டிகள் கொள்ளைபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மறைந்த ஜெயலலிதா ஓய்வெடுக்க பயன்படுத்திய கொடநாடு பங்களாவில் காவலாளியை கொலை செய்து விட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், முக்கிய சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கொடநாடு எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட நுழைவு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு கேட்டிலும் 2 காவலாளிகள் ஷிப்ட் முறையில் வேலை செய்கின்றனர். இது தவிர தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் 500க்கும் மேற்பட்டோர் இங்கே தங்கியுள்ளனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த பங்களாவிற்கு வந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கும். அவரது மரணத்திற்குப் பிறகு அங்கு யாரும் செல்வதில்லை. பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

10 பேர் கும்பல்
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத 10 பேர் திடீரென கொடநாடு பங்களாவிற்குள் நுழைய முயன்றனர். அப்போது 10ஆம் நம்பர் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ஓம்பகதூர், கிருஷ்ணபகதூர் ஆகியோர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

காவலாளி கொலை
அப்போது, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினர், கத்தியால் குத்தினர் இதில் ஓம்பகதூர் பலத்த காயம் அடைந்தார்.
சத்தம் எழுப்பிய கிருஷ்ண பகதூரை வாயில் துணியை வைத்து அடைத்து, கட்டிபோட்ட கும்பல், பங்களாவுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளைக் கும்பலால் தாக்கப்பட்ட காவலாளி ஓம்பகதூர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொள்ளையர்கள் யார்
இந்த கொள்ளை மற்றும் கொலை குறித்து சம்பவ இடத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கொள்ளைக் கும்பல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளையடித்தது என்ன?
கொடநாடு பங்களாவில் தங்கக் கட்டிகள், வைர ஆபரணங்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களும், கட்சி தொடர்பான ஆவணங்களும் இங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்றும் திடுக்கிடும் தகவர்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications