பெங்களூர்- கோவை தனியார் பேருந்தில் 1.5 கிலோ நகை கொள்ளை
கோவை: பெங்களூரில் இருந்து கோவை வந்த பேருந்தில் சுமார் 1.5 கிலோ தங்கம் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகின்றார். கோவை நகைகடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகை விநியோகம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எப்போதும் போல் கோவை வந்து ஆர்டர் எடுத்த ராஜேஷ், பெங்களூரில் உள்ள தன்னுடைய உதவியாளர் பப்புவை 3.5 கிலோ நகைகளை கோவைக்கு எடுத்துவர கூறியுள்ளார்.
அதன்படி பப்புவும் நகைகளை எடுத்துக் கொண்டு நேற்று இரவு 11.30 மணிக்கு கோவை புறப்படும் பெங்களூரு தனியார் பஸ் ஒன்றில் பயணித்து, இன்று காலை கோவை வந்தடைந்துள்ளார். உடனே ஆர்.எஸ்.புரத்தில் தங்கியுள்ள ராஜேஷை பார்க்கச் சென்றுள்ளார்.
அங்கு சென்று நகைப்பையை பிரித்து பார்த்த போது, 1 கிலோ 600 கிராம் மதிப்புடைய நகைகள் காணாமல் போய் இருந்தது. இதனையடுத்து இருவரும் அத்தனியார் பஸ்ஸில் தேடினர்.
அதனால் எந்த பலனும் கிடைக்காததால் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பஸ்சில் நகையை யாராவது திருடிச்சென்றார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூபாய் 44 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொள்ளைச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications