தமிழக மக்களுக்கு ஓர் நல்ல செய்தி... டிச. 1 முதல் ஜில்லுன்னு மழை பெய்யுமாம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றுழத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றுழத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தாமதமாக தொடங்கியது.

கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் அதாவது 676.1 மி.மீ. அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது.
கடந்த ஆண்டு மழை நிற்க வேண்டும் என்று கடவுளை வணங்கியவர்கள், இந்த ஆண்டு மழை எப்போது பெய்யும் என்று வருண பகவானை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். ஓரிரு நாட்கள் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு நோக்கி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொள்ளும். இது தமிழகக் கடற்கரையோரமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும். கடலோரப் பகுதிகளிலும், மேலும் ஒரு சில இடங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும் என்று கடந்த சில தினங்களுக்கு வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரமணன் சொன்ன வானிலை அறிக்கை சொன்னபடியே பலித்துவிட்டது. இப்போது, டிசம்பரில் மழைக்கு வாய்ப்புண்டு என்று அவர் கூறியுள்ளார். ரமணன் சொன்னதும், பாலச்சந்திரன் சொன்னதும் பலிக்குமா பார்க்கலாம்.
எதற்கும் உங்கள் கைகளில் குடை அவசியம் வச்சிக்கங்க சென்னைவாசிகளே!












Click it and Unblock the Notifications