வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு: சில இடங்களில் குழப்பம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சில இடங்களில் அதிகாரிகள் வராத காரணத்தால் குழப்பம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 6ம் கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு நாள் சிறப்பு முகாம் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

பெண்கள் ஆர்வம்
இந்த முகாம் தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது. சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடந்த முகாம்களில் பெண்கள் அதிகளவு பங்கேற்றனர். ஒரு சில மையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்தனர்.

புதிய வாக்காளர்கள் ஆர்வம்
புரசைவாக்கம், மைலாப்பூர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் 18 வயதான புதிய வாக்காளர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

பெயர் இல்லாத வாக்காளர்கள்
பலர் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது, ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

மார்ச் 25 வரை சேர்க்கலாம்
இதற்கு வரும் 25-ந்தேதி வரை தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் ‘ஆன்லைன்' மூலம் ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல், 2 பாஸ்போர்ட் போட்டோக்கள் போன்ற உரிய ஆவணங்களுடன் சென்று பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு
தேர்தல் அதிகாரிகள் முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மையத்தின் வெளியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மேஜைகள் போட்டு வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருந்தனர். அவர்களிடமும் பொதுமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று பார்த்து உறுதி செய்து கொண்டனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்
மயிலாப்பூரில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகாரி வராத காரணத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் திண்டாடினர். இதனால் அங்கு அமர்ந்திருந்த உதவி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

60418 மையங்களில் முகாம்
இந்த சிறப்பு முகாம் பற்றி பேசிய பிரவீண் குமார்,
வாக்காளர் சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 60,418 மையங்களிலும், சென்னையில் 3,254 மையங்களிலும் நடந்தது. முகாம்களில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பலர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை?, முகவரி மாற்றம் குறித்து விளக்கம் கேட்டனர். இவர்களுக்கு 25-ந்தேதி வரை தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும். 18 வயது பூர்த்தியானவர்கள் அளித்த விண்ணப்பங்கள் 100 சதவிகிதம் சேர்க்கப்பட்டு உள்ளது.

குவிந்த வாக்காளர்கள்
தற்போது முகாமில் விண்ணப்பித்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். 11-ந்தேதி புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை தெரியவரும் என்றார்.
எதிர்பார்த்ததைவிட அதிகளவு வாக்காளர்கள் வந்ததால் விண்ணப்பம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விண்ணப்பத்தை நகல் எடுத்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications