அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. சென்னை - பெங்களூர் ரயில் சேவை பாதிப்பு!
ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதன் காரணமாக சென்னை - பெங்களூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த சரக்கு ரயில் கார்களை ஏற்றிச் சென்ற நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை அரக்கோணம் வழியாக சரக்கு ரயில் ஒன்று இன்று சரக்குகள் கையாளும் மேல்பாக்கம் ரயில் நிலைய யார்டுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் எதிர்பாராத விதமாக திடீரென சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகின.
உடனே, ஆபத்தை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் இந்த விபத்து குறித்து சரக்கு ரயில் ஓட்டுநர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக சென்னை - பெங்களூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை - பெங்களூர் செல்லும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. லால்பாக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட பெட்டிகளை மீட்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என்பதால், அதுவரை ரயில் சேவையில் பாதிப்பு இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications