வெளி மாநிலத்தில் நீட் எழுத போகும் மாணவர்களெல்லாம் யாருன்னு நினைச்சீங்க.. செங்கோட்டையன் பதிலை பாருங்க
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள 10 மையங்களில் நீட் தேர்வு எழுதவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த விழாவில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள 10 நீட் தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கள நிலவரத்தை விசாரித்து பார்த்தால் அது வேறு மாதிரி உள்ளது. உதாரணத்திற்கு, நெல்லை டவுன் அரசு பள்ளி மாணவி சக்தி என்பவர், கேரளாவின் எர்ணாகுளத்தில் தேர்வு எழுத உள்ளதாக கூறுகிறார் உள்ளூர் நிருபர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்த விவரம் பள்ளிக் கல்வி துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டிற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளது குறித்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சரின் மாறுபட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications