சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி...? பரிசீலனை செய்யுமா தமிழக அரசு
சென்னை: ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அண்டா, குண்டா, என எதற்கும் உதவாத பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்த்து நிரந்தரமாக உதவும் வகையில் அரசுப் பணி வழங்கினால் அவர்களின் குடும்பமும் பயன்பெறும்.
இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாடுபிடி வீரர்கள்
ஆண்டுதோறும் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் பிரபலமான ஜல்லிக்கட்டி போட்டி என்றால் மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடைபெறுவதை கூறலாம். இதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர், சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஜல்லிக்கட்டும் பிரபல்யமானவை.

காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறி பாயும் காளைகளை அடக்க ஏராளமான காளையர்கள் களத்தில் நின்று தங்கள் வீர தீரத்தை காட்டுவர். இதில் சிலர் மட்டுமே சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்படுவர். அதுவும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி அனைவர் முன்னிலையிலும் இந்த தேர்வு இருக்கும்.

அண்டா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது என்பதால் அங்கு மட்டும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக தரப்படுகிறது. மற்றபடி மற்ற மாடுபிடி வீரர்களுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பரிசுப்பொருட்கள் கிடைப்பதில்லை. அண்டா, குண்டா, பீரோ, கட்டில், சைக்கிள் போன்ற பொருட்களே அதிகளவில் வழங்கப்படுகிறது.

கவுரவிப்பு
இந்நிலையில் ஆண்டுதோறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கி அவர்களை கவுரப்படுத்தினால் அது அவர்களின் எதிர்காலத்திற்கும், குடும்பத்திற்கும் நிரந்தரமாக பயன் தரும். இது குறித்து பரிசீலித்து ஒரு நல்ல அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications