சகாயம் குழுவில் இடம்பெற தயங்கும் அதிகாரிகள்... ஏன் இந்த பயம்?
மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு ஆய்வு குறித்து ஆய்வு செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவில் இடம் பெற அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனராம்.
மதுரை மாவட்டத்தில் 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கனமீட்டர் கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என அப்போதைய கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் சகாயம் மதுரையிலிருந்து மாற்றப்பட்டார்.

அதன் பின் கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா கிரானைட் முறைகேடு தொடர்பாக 20 வழக்குகளை பதிவு செய்தார். தற்போதைய கலெக்டர் சுப்ரமணியன் 42 வழக்குகள் பதிவு செய்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்கள் கொள்ளை போனதாக "டிராபிக்" ராமசாமி தாக்கல் செய்த வழக்கில், மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசும் இதற்கான அரசாணை பிறப்பித்தது.
ஆய்வுப்பணியில் உதவ இரண்டு துணை கலெக்டர்கள், இரண்டு தாசில்தார்கள், இரண்டு புவியியலாளர்கள், நான்கு பணியாளர்கள், ஒரு போட்டோகிராபர், ஒரு வீடியோகிராபர் உட்பட 14 பேர் தேவை என அவர் கேட்டார். தமிழக அரசும் அவர் விரும்பியபடி அதிகாரிகளை குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டது.
ஆனால் இக்குழுவில் இடம்பெற அதிகாரிகள் ,அலுவலர்கள் பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள், "சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் முறைகேடுகள் குறித்து ஆய்வு அறிக்கை அளித்துவிட்டு சென்னை சென்று விடுவார். உதவப்போன நாம் உள்ளூரில் பணியாற்ற வேண்டும்.
அரசும் இந்த முறைகேடு விஷயத்தில் என்ன நிலையில் உள்ளது என்பது குழப்பமாகவே உள்ளது. எனவே ஆய்வுக்கு உதவப்போய் பிரச்னையில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்" என்று கூறுகின்றனராம்.
இதற்கிடையே, சகாயம் நேற்று மதுரை வந்து விசாரணையை துவக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று மதுரை வரவில்லை. "பிற மாவட்டங்களிலும் நடந்த கனிமவளக் கொள்ளைகளையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டும்" என டிராபிக் ராமசாமி புதிதாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த மனு மீதான கோர்ட் உத்தரவை அறிந்தபின் விசாரணையை துவக்கலாம் என்பதால் சகாயம் மதுரைக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சென்னை ஹைகோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications