ஒரே கல்லுல நிறைய மாங்கா... முதலீட்டாளர்களைக் கவர சுறுசுறுப்பாகும் தமிழக சுற்றுலாத்துறை
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக வரும் தொழிலதிபர்கள் மாமல்லபுரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பாரம்பரிய இடங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 3000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் தொழிலதிபர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளனர்.
சில வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குடும்பத்துடனும் சென்னை வந்துள்ளனர். அவர்கள் மாமல்லபுரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பாரம்பரிய இடங்களைக் கண்டு ரசிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் வந்திறங்கிய முதலீட்டாளர்களுக்கு, 'டிஸ்கவரி தமிழ்நாடு' என்ற புத்தகத்தை, தமிழக சுற்றுலா துறை வழங்கியுள்ளது. அதில், தமிழகத்தின் வரைபடத்துடன் கூடிய சுற்றுலா தலங்கள் குறித்த தகவல், 33 நட்சத்திர ஹோட்டல்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகள், இந்திய சுற்றுலா அலுவலகம், தமிழகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கலாசார மற்றும் பண்பாட்டு விழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டைப் பயன்படுத்தி தமிழக சுற்றுலாவைப் பிரபலப் படுத்தி, அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, சென்னை விமானநிலையத்தில் இருந்து நந்தம்பாக்கம் வரையிலான சாலையும் மற்றும் நகரில் உள்ள பல்வேறு சாலைகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.