லாரி ஸ்டிரைக்: அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.. ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை
லாரி ஸ்டிரைக்கை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பல கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தெசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சரக்குகள் தேங்கி பல கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
லாரிகள் சரக்குகளுடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போயிருக்கிறது. நாமக்கலில் கோடிக்கணக்கான முட்டைகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் பண்ணையிலேயே தேங்கி இருக்கிறது.
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் காய்கறிகள், பழவகைகள் போன்ற மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களை தேவைப்படும் வேறு ஊர்களுக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் சந்தைகளில் வரத்து குறைந்து காய்கறிகள் மற்றும் பழவகைகளின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
இந்த வேலை நிறுத்தத்தால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அன்றாட டீசல் விலை நிர்ணய நடைமுறையை ரத்து செய்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டுமென்றும், டீசலை ஜிஎஸ்டிக்குள் உடனடியாக கொண்டு வர வேண்டுமென்றும், காலாவதியான சுங்கசாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் இன்னும் பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்காக தான் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
லாரி தொழிலை நம்பி பல லட்ச தொழிலாளர்கள் இருக்கையில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதே கிடையாது. கடன் வாங்கி லாரி தொழில் ஈடுபட்டிருப்பவர்கள் மத்திய, மாநில அரசுகளின் கட்டண கொள்ளையால் இழப்பு ஏற்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் லாரியை விற்று கடனை அடைக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
லாரி தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருவதால் இந்த தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஏற்க முன்வர வேண்டும். லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.