அடிக்கடி விபத்து... அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்ய தனிக்குழு தேவை: விஜயகாந்த்
சென்னை: அரசு பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தனியார் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்ய தனிக்குழு இருப்பது போன்று, அரசு பேருந்துகளை ஆய்வு செய்யவும் தனிக்குழு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சக்கரம் கழன்று ஓடுகிறது பாருங்கள்...
தமிழகஅரசுபேருந்துகள் தொடர்ந்து விபத்திற்குள்ளாவதும், நடுவழியில் பழுதாகி நிற்பதும், பேருந்தின் சக்கரம் கழன்டு ஓடுவதும், மேற்கூரை பெயர்ந்து விழுவதுமென மோசமான நிலையில் உள்ளன. போக்குவரத்து துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வற்புறுத்தலால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல், அதில் உள்ள தவறுகளையும், பழுதுகளையும் சுட்டிக்காட்டாமல், சிலநேரங்களில் பேருந்தை பார்க்காமலேயே பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்றதென தகுதிச்சான்று வழங்குவதால்தான், இதுபோன்ற நிலை உள்ளதாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊழியர்கள் மீது பழி போடுவதா...?
மேலும் பேருந்தில் ஏற்படும் அனைத்து பழுதுகளுக்கும்,அரசு போக்குவரத்து நிர்வாகம் தொழிலாளர்கள்மீது பழிபோடுவதாக கூறுகிறார்கள். பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்லும், தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்ய தமிழகஅரசு தனிக்குழு அமைத்துள்ளதை போலவே, அரசு பேருந்துகளுக்கும் தனிக்குழுக்களை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே, வட்டார போக்குவரத்து அலுவலர் பேருந்திற்கு தகுதிச்சான்று வழங்கவேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பஸ் பழுதைத் தவிர்க்கலாம்...
அதுபோன்ற நடைமுறையை கொண்டுவந்தால்,ஓட்டுனர் இருக்கை சரியில்லாமல் சென்னை ஜெமினி மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது போன்ற விபத்துகளை தடுத்திருக்கமுடியும்.

கண்ணாடி சரியா இருந்தால்...
மேலும் பேருந்தின் முகப்புவிளக்கும் அதன்டிம், பிரைட் சுவிட்சும், பின்புற சிவப்பு விளக்கும், இடவலம் பார்க்கும் கண்ணாடிகளும் சரியாக இருந்தாலே, பெரும்பாலான பேருந்து விபத்துகளை தடுத்திருக்கமுடியும்.

உயிரோடு விளையாடாதீர்...
எனவே அதிமுக அரசுபொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பேருந்துகளுக்கு அவசிய அடிப்படை தேவையான பராமரிப்புப்பணிகளில் மெத்தனம் காட்டாமல், அதற்கு முக்கியத்துவம் அளித்து, பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications