கவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை!
நடனமாடிய பெண்ணின் கன்னத்தை தட்டி மீண்டும் ஆளுநர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Recommended Video
திருவையாறு: மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய்விட்டது. திருவையாற்றில் நாட்டிய பெண்ணின் கன்னத்தை தட்டியுள்ள ஆளுநர் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரின் பெயரும் அடிப்பட்டது. இதனால் பதவியேற்று ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காத ஆளுநர் புரோஹித், திடீரென செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, பேராசிரியர் நிர்மலாதேவி குறித்த செயலுக்கு அனைவருக்கும் விளக்கமளித்தார்.
பின்னர், செய்தியாளர் சந்திப்பு முடிந்தும், பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவரது கன்னத்தை ஆளுநர் செல்லமாக தட்டினார். இதனால் அந்த பெண் பத்திரிகையாளர், தனது அனுமதி இல்லாமல் ஆளுநர் எப்படி தன் கன்னத்தை தொடலாம் என ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த செயல் அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவையாற்றில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, நாட்டிய பெண்ணின் கன்னத்தை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தட்டியதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி திருவையாற்றில் சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆளுநரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது நடனமாடிய ஒரு பெண்ணின் கன்னத்தை பாராட்டும் விதமாக ஆளுநர் தட்டிக் கொடுத்ததாகவும், அந்த செயல் அப்போது சாதாரணமாக தெரிந்தாலும் தற்போதுதான் அதன் அர்த்தம் புரிவதாகவும் நாட்டிய விழாவில் பங்கேற்றவர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய விவகாரமே அடங்காத நிலையில், மீண்டும் அதுபோன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.