அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்... ஆளுநர் பன்வாரிலால் முதல் பேட்டி!
அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை : அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதே என்னுடைய முதல் கடமை. இரண்டாவதாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் அதில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. அனைத்து முடிவுகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே இருக்கும்.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நான் என்னுடைய ஆதரவை அளிப்பேன். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்வர், அமைச்சர்களுடன் நல்ல நட்பு பாராட்டுவேன், தமிழகத்திற்கு கூடுதல் நிதி கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வேன்.
என்னுடைய தலைமையின் கீழ் செயல்பாடுகளில் நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்கும். தமிழகத்திலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பன்வாரிலால் தெரிவித்தார்.