ஆளுநர் ஏன் மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்? முத்தரசன் சொல்வதை கேளுங்கள்
பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு செய்வதாக முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
திருத்துறைப்பூண்டி : தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிர்வாக சிக்கல்களில் இருந்து மக்களை திசை திருப்பவே ஆளுநர் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். அப்போது, மாநில அரசில் எப்போது எல்லாம் நிர்வாக சிக்கல்கள் எழுகிறதோ அதை மறைக்கும் விதமாக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
மாவட்டங்களில் தன்னிச்சையாக ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது மாநில உரிமையை பாதிக்கும் செயல் என்றும், கூட்டாச்சி தத்துவத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆளுநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மாநில அரசை காப்பாற்றவே ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார். இதற்கு பிண்ணனியில் இருப்பவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும். மத்திய அரசு இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.
மேலும், முத்தலாக் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றாமல், எதிர்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்து உள்ளார்.