அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: ஜூன் 1-க்குள் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ரோசய்யா கடிதம்
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தலை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் மே 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த 2 தொகுதிக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனிடையே இந்த தேர்தல்கள் ஒத்திவைப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை ஜூன் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்தது. இது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த 2 தொகுதி தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை மே 27-ந் தேதிக்குள் கேட்டு முடிவெடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மே 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகிய இருவரும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்தனர்.
இதேபோல 2 தொகுதி திமுக வேட்பாளர்களான அஞ்சுகம் பூபதி, கேசி பழனிச்சாமி ஆகியோரும் தேர்தலை விரைவாக நடத்த கோரி லக்கானியிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா, தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனவே இரு தொகுதிகளுக்கும் ஜுன் 1-ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications