அப்பல்லோவில் ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தாரா இல்லையா.. குழப்பிய டாக்டர்கள்
அப்பல்லோ மருத்துவனைக்கு சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருந்த நிலையில், அவர் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் பார்த்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் விளக்கம் அளித்தனர்.
அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது, யார் யாரை ஜெயலலிதா பார்க்க விரும்பினாரோ அவர்கள் மட்டுமே ஜெயலலிதா இருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ஜெயலலிதா பார்க்க விரும்பாதவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
அப்போது, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது, ஜெயலலிதாவை சந்தித்தாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது விளக்கம் அளித்த மருத்துவர் ஆளுநர் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று உறுதியாக கூறினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மொத்தம் 3 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அக்டோப்ர் 1ம் தேதி முதல் முறையாக சென்ற அவர், இரண்டாவது முறையாக அக்டோபர் 22ம் தேதியும், ஜெயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ம் தேதி 3வது முறையாகவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் சென்றார்.
அதில் முதல் 2 முறை சென்று திரும்பி போது, செய்தியாளர்களிடம், ஜெயலலிதா நலமாக இருக்கிறார், அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன் என்று ஆளுநர் கூறினார். ஜெயலலிதாவை பார்த்தீர்களா என்ற கேள்விக்கும் ஆளுநர் இல்லை என்றே பதில் அளித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பார்த்தார் என்று கூறியுள்ளனர். இது பல குழப்பங்களை மக்களிடையே உருவாக்கியுள்ளது.