அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் ஊழல்.. ஆளுநர் உரையைப் புறக்கணித்த ஸ்டாலின் புகார்
சென்னை: தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி ஊழல் நிறைந்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதற் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார்.
அரசின் எதிர்கால திட்டங்களையும் அரசின் கடந்த கால நிலைப்பாடுகளையும் ஆளுநர் தன் உரையில் தெரிவித்து பேசினார்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை மீட்டதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு நன்றி தெரிவிப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
இந்த கூட்டத்தொடரை முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
ஸ்ரீரங்கம் தேர்தலில் காவல்துறை உதவியுடன் வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் நடந்துள்ளதாக குறிப்பிட்ட திமுக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக தங்களின் வெளிநடப்புக்கு காரணம் தெரிவித்தது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
வெளிநடப்புக்குப் பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு மோசமான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

வெற்றி நியாயமா?
ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வரை கொடுத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக அதை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

செயின் பறிப்பு
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் செயின்பறிப்பு, வழிபறி கொள்ளைகள் நடைபெறுகின்றன. அன்றாடம் கொலை, கொள்ளை,கற்பழிப்புகள் ஜெயலலிதாவின் பினாமி ஆட்சியில் அரங்கேறுகிறது.

எங்கும் ஊழல் மயம்
தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி ஊழல் நடைபெறுகிறது தாதுமணல் எடுப்பதில் ஓருலட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதைப்பற்றி விளக்கவில்லை, எந்த விசாரணையுமில்லை. பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தேர்வில் ஊழல் நடைபெற்றுள்ளது. தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், மீனவர்களுக்கு டீசல் வழங்கியதில் கூட ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் கொலை
நீதிமன்றங்களில் வழக்கறிஞர் கொலை, நீதிபதி வீட்டில் கொள்ளை என நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை ஆளுநர் உரையில் பாராட்டுகின்றனர். எனவே இதை கண்டித்து நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

அருகதையற்ற ஆளுநர்
இதேபோல ஆளுநர் உரையை புறக்கணித்த புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஆளுநர் பதவிக்கு அருகதையில்லாத ரோசய்யா திரும்பி போக வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

கவுரவக்கொலைகள்
தமிழகத்தில் 102 கவுரவக்கொலைகள் நடைபெற்றுள்ளது. ஆளுநரிடம் மூன்று முறை கடிதம் கொடுத்தும் ஒருமுறை கூட அழைக்கவில்லை. இவர் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படுகிறார். இது ஆளுநர் உரையாக இருக்காது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றுவதைப் போலவே இருக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications