வலிப்பினால் அவதிப்பட்ட குழந்தை... காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்- பயணிகள் பாராட்டு
திருச்சி: நள்ளிரவில் ஓடும் பேருந்தில் வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். திருச்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு அரசுப் பேருந்து ஒன்று மதுரைக்குப் புறப்பட்டது. மதுரை கோட்டம் அருப்புக்கோட்டை கிளையிலிருந்து இயக்கப்படும் அந்தப் பேருந்தில் ஓட்டுநர் ராமர், நடத்துநர் பாஸ்கரன் பணியில் இருந்தனர்.
பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், மதுரைக்குப் பயணம் செய்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபினவதனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் கொதிக்க ஆரம்பித்தது. குழந்தைக்கு காய்ச்சலின் வேகத்தினால் வலிப்பு ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் தவித்தனர். சக பயணிகளிடம் தங்களின் நிலையை எடுத்துக் கூறினர். இதனையடுத்து பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சக பயணிகள், இதுகுறித்து நடத்துநரிடம் தெரிவித்தனர். அப்போது அந்தப் பேருந்து பஞ்சப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது.

மதுரைக்கு புறப்பட்ட பேருந்து
திருச்சி நகர எல்லையைத் தாண்டினால் மருத்துவமனை இருக்காது என்பதால், மீண்டும் பேருந்தை திருச்சிக்கு திருப்பினர். எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். அங்கு குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சக பயணிகள் பொறுமையாக காத்திருந்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த பின்னர் குறைந்தபட்சம் சில மணி நேரமாவது குழந்தை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதால், அந்த தம்பதியை அங்கேயே விட்டுவிட்டு, சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து மீண்டும் மதுரைக்குப் புறப்பட்டது.
பயணிகள் பாராட்டு
பணிச்சுமை, பல்வேறு கட்டுப்பாடுகள், அதிகாரிகளின் அதிரடி உத்தரவுகள் என்று பல்வேறு மனஉளைச்சல்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் நிலையிலும், எதைப் பற்றியும் யோசிக்காமல் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட்ட பஸ் ஓட்டுநர் ராமர், நடத்துநர் பாஸ்கரனுக்கு பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
மருத்துவர் நெகிழ்ச்சி
வலிப்பு முற்றியிருந்தால் குழந்தை சுய நினைவை இழந்திருக்கும். மூளையில் லேசான பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம். இதனால், குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண்குமார் தெரிவித்தார். ஆனால், சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் உரிய நேரத்தில் குழந்தையைக் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications