சென்னையில் மெட்ரோ ரயில் பால தூண் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து- 10 பேர் படுகாயம்
சென்னை: சென்னை அசோக் பில்லர் அருகே மெட்ரோ ரயில் பாலத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை படப்பையில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மெட்ரோ ரயில் பாலம் தூணின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சிதறியது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து விபத்து காரணமாக அசோக்பில்லர் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்து உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது.
சென்னையில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சரியான பராமரிப்பு இல்லாததே அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓட்டை உடைசல் பேருந்துகளும், உடைந்த படிக்கட்டுகளுடன் கூட பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications