சென்னை ஹைகோர்ட், மதுரை கிளை உயர் பாதுகாப்பு மண்டலங்களாக பிரகடனம்- மத்திய படை தேவையில்லை: தமிழக அரசு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றை தமிழக அரசு உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்துள்ளதால் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை தேவை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கக் கோரியும், இந்த விஷயத்தில் நீதித்துறை முட்டுக்கட்டையாக இருப்பது மற்றும் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதைக் கண்டித்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது நீதிமன்ற அறைக்குள் அண்மையில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையை உயர் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவை யில்லை. தமிழக போலீஸின் பாதுகாப்பே போதுமானது என்றார்.
ஆனால் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் குறிப்பிட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோன்ற பாதுகாப்பு முறை உயர் நீதிமன்றத்துக்கு தேவை. பேசுவதற்கும், போராடுவதற்கும் உரிமை இருந்தாலும், அதற்கு ஒரு எல்லைக் கோடு இருத்தல் வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட்னார். பின்னர் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச், உயர் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித் துள்ளார். வழக்கு விசாரணை அக்டோபர் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது என்றனர்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.