மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு.. கிராமப் புற மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது- விஜயபாஸ்கர் உறுதி
மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கிராமப் புற மாணவர்களு பாதிப்பு எதுவும் இருக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்றும் கிராமப்புற அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும் தனியாக அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் மருத்துவ மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வகையான போராட்டங்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கார் செய்தியாளர்களிடம் கூறியது:
மேல்முறையீடு
மருத்துவ மேற்படிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த உடன் கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று கூறினோம். அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அரசின் கொள்கைப்படியே..
மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 1990ம் ஆண்டு முதல் என்ன நடைமுறையில் இருந்ததோ அதே நடைமுறையைத்தான் இந்த ஆண்டும் அரசு பின்பற்றியது. அதில் ஒரு சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதால் தீர்ப்பு இப்படி வந்திருக்கிறது.
கிராம சேவை
மருத்துவ சேவையை கிராமங்களில் உறுதிப்படுத்தும் வகையில் கிராமத்தில் பணி புரியக் கூடிய மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கின்றோம். இதன்மூலம் கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை உறுதிப்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
அந்த கிராமத்தில் பணிபுரியும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, கிராம மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு செயல்படும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.