"எத்தனை ரவுண்டு போட்டு கூட்டு சேர்த்தாலும் டெல்லி செங்கோட்டைக்கு போக முடியாது"

மனோகர் இன்று சபையில் ஆற்றிய உரை...:
மக்களை பிளவுபடுத்தும் மதவாத அச்சுறுத்தலை வேரறுத்து மாநிலத்தின் உரிமைகளை முன் வைத்து முழுமையான மக்களாட்சியை உருவாக்க புரட்சித் தலைவர் கண்டெடுத்த அ.தி.மு.க. என்ற பெயருக்கான முழுமையான காரணத்தை நிறைவேற்ற கட்சியின் காவல் தெய்வமாக விளங்கி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. 40 தொகுதிகளையும் வென்று நாடாளும் பிரதமராகி பாராளுமன்றம் போகிறார்.
இந்த செய்தி 2014-ம் ஆண்டின் வரலாற்று சுவடாக பதிவாக போகிறது. இதை புத்தாண்டு செய்தியாக இந்த அவையில் பதிவு செய்ய போகிறேன்.
ஈழத் தமிழர்களின் ஓலக்குரல்கள் ஒலிக்கும்போது செவிடானவர்கள் ரயிலே ஓடாத தண்டவாளத்தில் தலைவைத்து போராடியதாக ஏமாற்றியவர்கள். உயிருடன் இருக்கும்போது உதாசீனப்படுத்தி விட்டு உயிர் பிரிந்த பின் அவர்களுக்காக உருகி இரங்கல் பா எழுதியவர்கள்.
அரசியல் சட்டத்தை எரிப்பேன் என வீர வசனம் பேசிவிட்டு எரித்த பின் தண்டனைக்கு பயந்து நகல்தான் என்றவர்கள். கூடவே இருக்கும் அன்பருக்கு என்றைக்கும் இரண்டாம் இடம்தான். ஆனால் மகனுக்கு மட்டும் முதலிடம் என்பவர்கள். குடும்பங்களை பெருக்கி கூடாரங்கள் அமைத்து கூடாநட்பு என்று சொன்னவர்களோடு கூட்டணி அமைத்தவர்கள்.
தேவைப்பட்டால் மணி மேகலை என்பது. தேவை இல்லை என்றால் புழுதி வாரி துற்றுபவர்கள். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று தமிழக மக்கள் இந்த புத்தாண்டில் முடிவு செய்திருக்கிறார்கள்.
அம்மாவின் ஆட்சியில் இல்லை என்ற சொல் மட்டும் இல்லை. மக்களுக்கு தேவையான எல்லாமே இருக்கிறது. 2012-13-ம் ஆண்டில் வறட்சியை சமாளிக்க ரூ. 160 கோடியை வாரி வழங்கினார்.
2014-2015-ம் ஆண்டு திட்ட செலவு இலக்கை ரூ. 42 ஆயிரத்து 188 கோடியாக உயர்த்தினார். தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் பாதுகாப்பு படைக்காக 10,500 பணியிடங்களும், காவல் துறையில் 24,500 கூடுதல் பணியிடங்களையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கை தமிழர் நலனுக்காகவும், தமிழக மீனவர்கள் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அம்மா திட்டத்தின் மூலம் 33.13 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தேசிய சட்டப் பள்ளி முதலான உயர் கல்வி நிறுவனங்கள் அமைத்துள்ளார். சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
போதிய மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நிதி ஆண்டில் மானியமாக ரூ.4900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்கள் பசியாற 290 அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்மா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். சாலைகள் மேம்படுத்தவும், பாலங்கள் கட்டவும் 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 3060.74 கோடி ஒதுக்கியுள்ளார்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் 1 கோடியே 29 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன.
தாய்நாட்டை வழி நடத்த போகும் தமிழ் தாய் ஆன முதல்வர் அத்துமீறும் சீனாவையும், அடங்க மறுக்கும் பாகிஸ்தானையும், இறுமாப்பு கொண்டுள்ள இலங்கையையும் ஒரே நாளில் அடக்கவல்ல தனி மனித ராணுவம் அம்மாதான்.
அவர் ஆளும் தமிழகத்தில் அமைதி உண்டு. இனி ஆளப்போகும் இந்தியாவிற்கு ஐ.நா.வில் நிரந்தர இடம் உண்டு. குடும்ப ஆட்சி இனி இங்கேயும் இல்லை. அங்கே டெல்லியிலும் இல்லை. இனி இந்தியா முழுமையிலும் அம்மாவின் ஆட்சிதான். இதற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலே சாட்சி.
ஏற்காட்டில் இடைத்தேர்தல் என்றவுடன் அங்கே போட்டி போடாமல் டெல்லிக்கு போய் டெபாசிட் கட்டினார்கள். அங்கே டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம். இப்போது மீண்டும் டெல்லி என்று ‘ரவுண்டு ரவுண்டு' ஆக கூட்டணி பேரம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எத்தனை ரவுண்டு போட்டு கூட்டு சேர்த்தாலும் டெல்லி செங்கோட்டைக்கு போக முடியாது. மக்கள் நலனே தன் நலன் என்று அயராது பாடுபட்டு வரும் அம்மா தேர்தலை பற்றியோ, கூட்டணி பற்றியோ கவலைப்படுவதே கிடையாது. ஏனென்றால் அவரது வெற்றி ஏற்கனவே மக்களால் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications