சென்னையில் பொன்னாருக்கு உற்சாக வரவேற்பு!
சென்னை: மத்திய அமைச்சராக பதவி ஏற்றபிறகு சென்னை வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து காலை 10 மணிக்கு விமானம் மூலம் மீனம்பாக்கம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களையும் சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பாஜக தலைமை அலுவலகம் சென்றார் பொன்.ராதாகிருஷ்ணன். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது.
6 மாத அவகாசம் தாருங்கள்..
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கையின் காரணமாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 33 தமிழக மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றியும் கேட்கிறீர்கள்.
நான் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள் 60 ஆண்டுகாலம் காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டது. அதில் இருந்து நாட்டை நிச்சயமாக மீட்பார்.
அதே போல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.
தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. அவரை பத்திரமாக மீட்க வெளியுறவுத்துறை தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தமட்டில் கடந்த பல ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காக போராடி வருகிறோம். நிச்சயமாக பிரதமர் மோடி நடுநிலையோடு அணுகி தமிழகத்துக்கான நீதியையும் உரிய நீரையும் பெற்றுத்தருவார்.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. வருகிற 2016 சட்டசபை தேர்தல் எங்களது இலக்காகும். அந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications