பஞ்சர் கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து - தாத்தாவும், பேரனும் பரிதாப பலி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே விராலிமலையில் பஞ்சர் கடைக்குள் அரசுப் பேருந்து ஒன்று புகுந்தது. இவ்விபத்தில் கடையில் பஞ்சர் ஒட்ட நின்று கொண்டிருந்த தாத்தா மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
விராலிமலையைச் சேர்ந்தவர் மணிபிள்ளை. இவரது 4 வயதான பேரன் மு. ஹரிபிரசாத். இவர்களுக்கு சொந்தமான சரக்கு வேனை விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலை மாதிரிப்பட்டி பிரிவு அருகே உள்ள ஒரு பஞ்சர் கடையில் நிறுத்தி பஞ்சர் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று மாதிரிபட்டி குறுக்கு சாலையை கடக்க முயன்ற மணல் லாரியின் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பஞ்சர் கடைக்குள் புகுந்தது. இதில் பஞ்சர் கடையில் இருந்த மணி மற்றும் அவரது பேரன் ஹரிபிரசாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்து பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். காயமடைந்த பேருந்து ஓட்டுநர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.