மதுரை கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை அக்.15-ல் தாக்கல்... சகாயம் ஐ.ஏ.எஸ் முடிவு
புதுக்கோட்டை : மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கை அக்15-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
கிரானைட் முறைகேடு விவகாரத்தில் தனிப்பட்ட யாரையும் குறி வைத்து விசாரணை நடத்தவில்லை என்றும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தான் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலூர் பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்த சேவற்கொடியோன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டோரை பி.ஆர்.பி., நிறுவனம் நரபலி கொடுத்து புதைத்ததாக புகார் கூறி இருந்தார். இதன் அடிப்படையில் சகாயம் உத்தரவுப்படி மேலூரை அடுத்த சின்னமலம்பட்டி பகுதியில் குழி தோண்டப்பட்டது. சுமார் 5 அடி ஆழம் தோண்டியபோது குழந்தையின் மண்டை ஓடு உள்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கின.
அவற்றை சேகரித்த போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் தங்களின் உறவினர்களுடையது என சின்ன மலம்பட்டியை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், 4 எலும்புக் கூடுகளில் 2 பெண்களுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் மண்டை ஓடு, சின்னமலம்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரது 8 மாத பெண் குழந்தையினுடையது என்பதும், காவி துணியுடன் கிடைத்த எலும்புக்கூடு சின்னமலம்பட்டியை சேர்ந்த சாமியாடி சின்ன கருப்பன் எலும்புக்கூடு என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
4 எலும்புக் கூடுகளின் ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் உறவினர்கள் என கூறுபவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே எலும்புக் கூடுகளில் அடையாளம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மதுரை ஆட்சியர் மற்றும் எஸ்பி,க்கு சகாயம் எழுதிய கடிதத்தை தொடர்ந்து எலும்புக்கூடுகள் கிடைத்த இடத்தில் இன்று மேலும் 10 அடி தோண்டப்படும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்ய வந்த சகாயம் செய்தியாளர்களிடம் பேசும் போது, கூடுதல் தடயம் கிடைக்கக் கூடும் என்பதற்காகவே மேலும் 10 அடி தோண்டப்படுகிறது. எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் சுடுகாடு என அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அவர் அளித்த பேட்டியின் போது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் தனிப்பட்ட யாரையும் குறி வைத்து விசாரணை நடத்தவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணை அறிக்கை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications