சகாயம் குழுவில் துணை கலெக்டர் உள்பட 15 பேர் நியமனம்- வேட்டை ஆரம்பம்!
மதுரை: கிரானைட் முறைகேட்டை விசாரிக்க உள்ள சகாயம் குழுவில் துணை கலெக்டர் உள்பட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக சகாயத்தின் விசாரணைக் குழுவுக்கு இடம் கூட ஒதுக்காமல், அதிகாரிகளையும் நியமிக்காமல் இழுத்தடித்து வந்தது தமிழக அரசு. நீதிமன்றம் கடுமையாக விளாசியதையடுத்து இப்போது தமிழக அரசு பணிந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த 31 ஆம் தேதி அனுமதி அளித்து, சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மதுரையில் முகாம் அலுவலகமும் அமைக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சகாயம் குழுவில் 2 துணை கலெக்டர்கள், 2 தாசில்தார்கள் மற்றும் புவியியல் அலுவலர்கள், பணியாளர்கள், தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வீடியோகிராபர், போட்டோ கிராபர் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த குழுவுக்கு, போக்குவரத்து தேவையான வாகன வசதி மற்றும் அலுவலக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் சகாயத்திற்கு அனுப்பி உள்ளது.
இந்த குழுவில் தனக்கு விருப்பமான அதிகாரிகளை தேர்வு செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சகாயத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சகாயம் தங்குவதற்கு அறையும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முகாம் அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இனி சகாயம் வேட்டை ஆரம்பமாகும்!












Click it and Unblock the Notifications