கன்னியாகுமரி: நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல்... பதற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் இருகிராம மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த கெவின், யாகப்பன், ததேயூஸ், அலெக்சாண்டர், பிஸ்மாஸ் ஆகிய 5 பேரும் இன்று அதிகாலை பைபர் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது கூட்டப்புளியை சேர்ந்த மீனவர்கள் 5 படகுகளில் சென்று இவர்கள் பைபர் படகை தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது திடீரென கூட்டப்புளி மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் கெவின், யாகப்பன், ததேயூஸ், அலெக்சாண்டர், பிஸ்மாஸ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து காலை 8 மணிக்கு இவர்கள் ஆரோக்கியபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் காயம் அடைந்த 5 மீனவர்களையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடந்த வாரம் ஆரோக்கியபுரத்தைச்சேர்ந்த 8 மீனவர்களை கூட்டப்புளியிலும், கூட்டப்புளியைச் சேர்ந்த 2 மீனவர்களை ஆரோக்கியபுரத்திலும் சிறை பிடித்தனர். பேச்சுவார்த்தைக்குப்பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் ஆரோக்கியபுரம், கூட்டப்புளி மீனவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் எதிரொலியாக தற்போது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.
மீனவர்கள் தாக்கப்பட்டதையடுத்து ஆரோக்கியபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications