குரூப்-4க்கு ஜூலை, குரூப்-1க்கு ஆகஸ்ட்டில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்- டி.என்.பி.எஸ்.சி
சென்னை: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 3வது வாரத்தில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. மேலும், குரூப் 2, குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 79 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 1 மெயின் தேர்வு முடிவு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட 1,241 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 (நேர்முகத்தேர்வு) முதல்நிலைத் தேர்வு முடிவு வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட 74 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் 2வது வாரம் வெளியாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 1,947 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் இறுதியில் வெளியாகும்.
குரூப்-4 பிரிவில் 4,931 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியாகிறது. குரூப்-1 பிரிவில் 45 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். தொகுதி சுகாதார புள்ளிவிவரத்திற்கான 172 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
65 உதவி சிறைத்துறை அதிகாரி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியிலும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 3வது வாரத்திலும், 5 சுற்றுலா அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்திலும் வெளியிடப்படுகிறது. குரூப்-3 ஏ பிரிவில் 36 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 2வது வாரத்தில் வெளியாகும்.