குருப்பெயர்ச்சி: போயஸ்கார்டனை விட்டு இடம் பெயர்ந்த ஜெ!
சென்னை: சமீபத்தில் நடந்த குருபெயர்ச்சி முதல்வர் ஜெயலலிதாவின் சிம்மராசிக்கு குறிப்பிடும்படியாக இல்லை என்று சில ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே போயஸ்கார்டனை விட்டு சில நாட்கள் சிறுதாவூர் பங்களாவிற்கு இடப்பெயர்ச்சி ஆகியிருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த 13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 6:04 மணிக்கு, மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியானார் குரு பகவான்.
இந்த குருப்பெயர்ச்சி முதல்வர் ஜெயலலிதாவிற்கு எப்படி இருக்கும் என்று சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
வழக்குகளை சமாளிக்கும் சக்தி
மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். நேற்று வரை, எதிரிகளாக, எதிர் அணியில் இருந்த பலர், இவரின் தலைமையை ஏற்பர். உடலில் ஆரோக்கியமும், புதிய நம்பிக்கையும் உண்டாகும்.அச்சுறுத்தல்களையும், வழக்குகளையும், எதிர்ப்புகளையும், சமாளிக்கும் சக்தி உண்டாகும். உடன் இருப்பவர்களில், நம்பிக்கை துரோகிகளையும், தவறானவர்களையும், விரட்டி அடிப்பார் என்று திருக்கோவிலூரைச் சேர்ந்த ஜோதிடர் பரணிதரன், கணித்துள்ளார்.
வெற்றி நிச்சசயம்
முதல்வர் ஜெயல்லிதாவின் சிம்மராசிக்கு 12ம் இடத்தில், குரு அமர்ந்து உச்சம் பெறுவதால் இவர் அதிக வெற்றிகளை பெறுவார். என்று கணித்துள்ளார் விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோதிடர் சிவகுரு ரவி.
நேரம் சரியில்லையே
மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், இவரால் மத்திய அரசில் பங்கு வகிக்க முடியாமல் போனதற்கு காரணம், சுய தசையில், சுய புத்தி நடைபெறுவதுதான். இந்த குரு புத்தி, அக்டோபர் 20ம் தேதி முடிந்தவுடன், மத்திய அரசில், இவரின் முயற்சியால், பல அனுகூலங்களை பெறலாம் என்கிறார் ஆற்காடு ஜோதிடர் சோமசேகரன்.
இடப்பெயர்ந்த முதல்வர்
பல ஜோதிடர்கள் பலவிதமான கருத்துக்களைச் சொன்னாலும் மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சிக்கு முதல் நாள், வேறு இடத்துக்கு மாற வேண்டும். பிறகு, ஒரு வாரத்துக்கு எங்கும் வெளியில் செல்லக் கூடாது என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம்.
போயஸ்கார்டன் டூ சிறுதாவூர்
ஜோதிடர்கள் சொன்னது போலவே ஜெயலலிதா சிறுதாவூர் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு, கோட்டைக்குக்கூட செல்லாமல் கார்டனிலேயே ஓய்வில் இருக்கிறார் முதல்வர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.. எது எப்படியோ குருபகவான் இடம்பெயர்ச்சியாகி எல்லோரையும் பெயர்ச்சியடையச் செய்துவிடுகிறார்.