மழையால் தண்டவாளத்தில் மண் சரிவு - குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதம்! 2 ரயில்கள் ரத்து!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் மண் சரிந்ததால் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக இயக்கப்படும் 2 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
திருவனந்தபுரம், நேமம், கொல்லம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் திருவனந்தபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நேமம் அருகே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் மண் விழுந்தது. இதனால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுபோல கொல்லம் அருகேயும் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கொல்லத்தில் இருந்து இன்று அதிகாலை 5.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேர வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லத்திலேயே நிறுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மும்பை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் கன்னியாகுமரியில் இருந்து காலை 9 மணி வரை புறப்படவில்லை.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காலை 6.45 மற்றும் 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.
இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்த மணலை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று பிற்பகலுக்குள் மணல் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து சீராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications