20 வருட காலம் மத்தியில் நிலையான ஆட்சிகள் அமைய கருணாநிதி காரணம்: தேவகவுடா புகழாரம்
Recommended Video
சென்னையில் இன்று மாலை, நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேவகவுடா பேசியதாவது: இந்த நாடு செல்வாக்கு மிக்க பழம்பெரும் தலைவரை இழந்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தம் மறைந்துள்ளது.
கூட்டாட்சி பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்த காலகட்டத்தில் அவர் மறைந்துள்ளார். ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கருணாநிதி. மாநில கட்சி தலைவர்களில் மிகப்பெரியவர் அவர்.
தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி.
முன்னாள் பிரதமர், வி..பி.சிங்கிற்கு துணையாக நின்று பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உதவினார்.
சுயமரியாதை, சமூக நீதி அவர் வாழ்க்கை முழுக்க பின்பற்றினார். 1989ல்தான் கூட்டணி ஆட்சி தத்துவம் பலம் பெற்றது. என்னை பிரதமராக்கியதில் கருணாநிதிக்கு பங்கு உள்ளது.
என்னை பிரதமராக கூறியபோது நான் தயங்கினேன். இருப்பினும், காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி அரசு அமைந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர் கருணாநிதி. எனது அரசுக்கு மட்டுமின்றி, ஐ.கே.குஜ்ரால் அரசு, வாஜ்பாய் அரசு, மன்மோகன்சிங் அரசுகளுக்கும் ஆதரவு அளித்து மத்தியில் 20 வருடங்கள் நிலையான ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.
அவரின் அரசியல் அறிவை எங்களால் மறக்கவே முடியாது. ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் என பல துறை வளர்ச்சியிலும் பங்களித்தவர் கருணாநிதி. தந்தை கருணாநிதியின் வரலாறு ஸ்டாலினின் தோளில் தூக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநில கட்சியை துவங்கி நடத்துவது பெரிய கஷ்டம். எனக்கே சொந்த அனுபவம் உள்ளது. எத்தனை மாநில கட்சிகள் வந்தன, சென்றன என்பது எனக்கு தெரியும். ஸ்டாலின் தனது பொறுப்பை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.