உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்... சொல்வது எச். ராஜா
வேதா நிலையத்தில் வேதாளங்கள் குடியிருந்ததால்தான் அங்கு வருமானவரி சோதனை நடைபெற்றதாக எச். ராஜா கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் எச். ராஜா கூறியுள்ளார். வேதா நிலையத்திற்குள் வேதாளங்கள் குடியேறியதால் ரெய்டு நடந்ததாகவும் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
போயஸ் கார்டனில் நடந்த ஐடி ரெய்டு பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான மின்னணு வடிவ ஆதாரங்களை அந்த வீட்டில் தான் வைத்திருந்தது.
சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள் கூறியிருந்தார் ஆடிட்டர் குருமூர்த்தி.

தினகரன் குற்றச்சாட்டு
இதற்கு கருத்து கூறிய தினகரன்,தங்களுடைய குடும்பத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசின் துணையோடு குருமூர்த்தி செயல்படுவதாக நேரடியாக குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மூலம் குருமூர்த்திக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

மைலாப்பூர் அறிவு ஜீவி
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, மைலாப்பூர் அறிவு ஜீவி என்று தினகரன் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும் தடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆளுனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வேதாநிலையம்
கடந்த வாரங்களில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையின் தொடர்ச்சியாகவே வேதா நிலையத்தில் ரெய்டு நடைபெற்றது. வேதா நிலையத்தில் வேதாளங்கள் குடியேறியதால்தான் இந்த ரெய்டு நடைபெற்றது.

ரெய்டு நடத்த வாரண்ட்
சோதனை நடத்துவதற்கு வாரண்ட் இருந்தால் போதும். வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய வாரண்டுடன் வந்துள்ளனர். அதை பார்த்ததும் அங்கிருந்த போலீசாரே சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளனர். அதிமுகவுக்கு இப்போது தலை எது, கால் எது என்று தெரியாத நேரத்தில் போயஸ் கார்டனில் சோதனை நடத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்.

சொத்துக்கள் அபகரிப்பு
தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்தால் தமிழக மக்கள் 1991 முதல் 96 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியை மறப்பதற்கு தயாராக இல்லை. அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்பது அப்போது நடந்தது.

மன்னார்குடி மாபியா
கங்கை அமரனின் பையனூர் பங்களாவை அப்படி அபகரித்தனர். இந்த மாதிரியாக மீண்டும் அவர்களின் கையிலே இந்த தமிழகம் சிக்கி சின்னா பின்னமாகி விடும் என்ற காரணத்தினால் மன்னார்குடி மாபியா திரும்பவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்குள்ளேயே பெரிய கொந்தளிப்பு வந்தது.

அமுதமும் விஷமும்
பாற்கடலை கடைந்த போது அமுதமும் வந்தது, விஷமும் வந்தது. அது போல ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 1 வாரமாக நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்களுக்கும் மத்தியில் ஆளும் பாதிய ஜனதா கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.

போட்டுக்கொடுத்தனர்
தினகரன் அடிக்கடி ஸ்லீப்பர் செல் என்று சொல்வார். ஸ்லீப்பர் செல் இப்போது எங்கே இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. அவரது குடும்பத்துக்குள்ளேயே இருந்த ஸ்லீப்பர் செல்கள் போட்டுக் கொடுத்துள்ளனர்.

யாரும் தப்ப முடியாது
விஜயபாஸ்கர், ராமமோகன ராவ் வீடுகளில் நடந்த சோதனைகள் தொடர்பாக வருமான வரித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உப்பை தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் எச். ராஜா.












Click it and Unblock the Notifications