ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலை தெரியுமா.. எச். ராஜா சொல்லும் "ஓ மை காட்" காரணம்!
நாகப்பட்டனம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசும் ஆரம்பத்தில் சரி என்றது. ஆனால் பின்னால் பல்டி அடித்தது. இது ஏன் என்பது கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதை விட மகா குழப்பமானது. விடையே தெரிய வாய்ப்பில்லாதது. இந்த நிலையில் இதற்கான செம காரணம் ஒன்று எச். ராஜா கூறியுள்ளார்.
60 வயதைத் தொடும் எச் ராஜா தி்ருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்து சாமி கும்பிட்டார். பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என்பது குறித்து சூப்பர் விளக்கம் கொடுத்தார்.
அவர் கூறுகையில், தமிழகத்துக்கு துரோகம் செய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக சொல்வதில் உண்மையில்லை. ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. இன்று வரை சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.
எனவே அதுபோன்ற நிலை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. எனவே, வலுவான, பாதுகாப்பான, சட்டரீதியான காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் 18-ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசு அமைக்கும் என்றார் ராஜா.
சத்தியமாக உமா பாரதியோ அல்லது மோடியோ அல்லது சதானந்த கெளடாவோ கூட இப்படியெல்லாம் யோசிக்கவே முடியாது...!