போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும்... ரஜினிக்கு எச்.ராஜா பதிலடி
நடிகர் ரஜினி காந்த் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் எச்.ராஜா, போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும் என்று கூறியுள்ளார்.
மதுரை: போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி காந்த் கூறியுள்ளதற்கு, போர் வரும் போது நாங்களூம் பார்த்துக் கொள்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. அப்படியே வந்தால் அவர் தனிக் கட்சி தொடங்குவாரா அல்லது தேசிய கட்சியுடன் இணைவாரா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே அவரது ரசிகர்களுடான சந்திப்பு கருதப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வதன் பின்னணி என்ன என்பது தான் புரியவில்லை என்றும் பலரும் புலம்பி வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், சுதந்திர போராட்டம் நடைபெற்ற போது லண்டனில் "இந்தியா ஹவுஸ்" என்ற கட்டிடம் இருந்தது. அங்கு சென்று சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கி இருந்தனர். ஆனால் அந்த புனிதமான இடத்தில் லலித் மோடி தங்கினார். அடுத்ததாக விஜய் மல்லையா தங்கி இருந்தார். தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். அதனால் தான் கார்த்தி சிதம்பரம் இப்போதே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். விரைவில் ப.சிதம்பரமும் ஓடி ஒளிவார். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும் என்றார். எந்த அர்த்தத்தில் எச்.ராஜா இவ்வாறு கூறியுள்ளார் என்பது போர் வரும் போது தான் தெரியும் போல் இருக்கிறது.