எச் ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று வைத்தியம் பார்க்கவேண்டும்: புதுவை முதல்வர் பாய்ச்சல்!
பாஜகவினர் எச் ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று வைத்தியம் பார்ப்பது நல்லது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: பாஜகவினர் எச் ராஜாவை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று வைத்தியம் பார்ப்பது நல்லது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் எச் ராஜா டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
எச் ராஜாவின் டிவிட் திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது டிவிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தரம் தாழ்ந்து பேசுகிறார்
இந்நிலையில் எச் ராஜா டிவிட் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது எச் ராஜா தரம் தாழ்ந்து பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
எச் ராஜாவுக்கு வைத்தியம்
எச் ராஜா மனநல வைத்தியரை சந்திக்க வேண்டும் என்றும் பாஜக நிர்வாகிகளும் எச் ராஜாவை மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்க்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் பார்த்துக்கொள்வார்கள்
தமிழக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் எச்சரித்தார்.
அரசு பொறுப்பேற்க வேண்டும்
மேலும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.