இப்போது ராஜபக்சேவை தூக்கி எறியச் சொல்லும் இளங்கோவன் அப்போது எங்கே போனார்.. ராஜா கிடுக்கிப்பிடி!
திண்டுக்கல்: ராஜபக்சேவை தூக்கி எறிய வேண்டும் என்று சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ராஜபக்சே 3 வருடமாக அதிபராக இருக்கிறார். மோடி அரசு பதவியேற்று 5 மாதம்தான் ஆகிறது. அதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்தது யார்.. இது இளங்கோவனுக்குத் தெரியாமல் போய் விட்டதா.. மறந்து போய் விட்டாரா.. இதுகுறித்து அவர் விளக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திண்டுக்கல் வந்த ராஜா அங்கு செய்தியாளர்களிடம் பேசினார் ராஜா. அப்போதுதான் இளங்கோவனின் கோரிக்கை குறித்து இப்படிக் கேள்வி கேட்டார் ராஜா.
ராஜாவின் பேச்சிலிருந்து...
இளங்கோவன் பேச்சைப் பாருங்க
காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி நினைந்திருந்தால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியில் இருந்து தூக்கி எறிய முடியும் என்று கூறினார்.
3 வருஷமா ஆட்சியில் இருந்தது யார்
கடந்த 3 ஆண்டுகளாக ராஜபக்சே பதவியில் தான் உள்ளார். கடந்த ஆண்டு மத்திய ஆட்சி செய்தவர்கள் யார்? எனக்கு மறந்துவிட்டது. இளங்கோவனுக்கு ஞாபகம் இருந்தால் இதுபற்றி அவர் சொல்லட்டும்.
2010ல் பதிவான வழக்கு
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை வழக்கு 2010-ல் பதிவு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நினைந்திருந்தால் இந்த வழக்கில் இருந்து மீனவர்களை விடுவித்து இருக்கலாம்.
தாரை வார்த்ததே நீங்கதானே
தற்போது கச்சதீவை மீட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராடிகிறார்கள். கச்ச தீவை தாரைவார்த்ததே காங்கிரஸ் ஆட்சியில் தான்.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை தூதரை சந்தித்து பேசியுள்ளார். இலங்கை தூதரும் நம் மத்திய அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.
காங்கிரஸ் அமைதி காப்பது நல்லது
எனவே காங்கிரஸ் கட்சியினர் அமைதி காப்பது நல்லது. 1983-ல் இருந்து மீனவர்கள் பிரச்சினை இருந்துவருகிறது. தி.மு.க. ஆட்சியின்போது இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்டனர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினர் மவுனமாக இருந்துள்ளனர்.
பாஜக வந்த பிறகு சுட்டுக் கொல்லப்படவில்லை
காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியிடம் இலங்கை அணி தோற்றது. உடனே தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு எந்த மீனவர்களும் சுட்டுக்கொல்லப்படவில்லை.
பொறுப்பாக செயல்பட வேண்டும் காங்கிரஸ்
எனவே காங்கிரஸ் கட்சியினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 4 சதவீத வாக்குகளே கிடைத்தது. இப்போது ஜி.கே.வாசன் வேறு பிரிந்து சென்றுவிட்டார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கிடையாது. அது மூழ்கும் கப்பல். 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்றார் ராஜா.