அருவா பிடிச்ச கை இது.. பெரியார் சிலை மீது கை வைத்தால் கை, கால்கள் வெட்டி எறியப்படும்.. வைகோ ஆவேசம்
Recommended Video

ஈரோடு: பெரியார் சிலை மீது கை வைப்பவர்கள் கைகள், கால்கள் துண்டு, துண்டாக வெட்டி எறியப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்தார்.
திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றி அராஜகத்தில் குதித்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
இதை பார்த்து பூரிப்படைந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பதிவில், நாளை தமிழகத்தில் பெரியார் சிலை இதேபோல அகற்றப்படும் என தெரிவித்திருந்தார்.

குண்டர் சட்டம்
ராஜாவின் வன்முறையை தூண்டும் பதிவுக்கு பலதரப்பும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தூக்கி போட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து இவ்வாறு பதிவிட்டு வருவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திருமாவளவன், சீமான்
பெரியார் சிலையை தொட ராஜா மட்டுமல்ல, அவரின் முப்பாட்டன் வந்தாலும் முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்தார். பெரியார் சிலையை தொட்டு பாக்கட்டுமே என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்தார்.

வைகோ கடும் ஆவேசம்
இந்த நிலையில், வைகோ ஒருபடி மேலே போய் காட்டமாக சீறிவிட்டார். ஈரோட்டில் பேசய அவர், "பெரியார் சிலை மீது கை வைத்தால் நடப்பதே வேறு. பெரியார் சிலையை அகற்றுவதாக சொல்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். சிலையை அகற்றும் இடம், நேரம் எது என்று கூறுங்கள். என் தலைமையில் தடுக்கும் படை வரும். சிலையை அகற்றும் நபரின் கை,கால் துண்டு, துண்டாக வெட்டப்படும். அருவா பிடிச்ச கையிடா இது" என்று ஆவேசம் காட்டினார் வைகோ.

பயந்துபோன ராஜா
விஷயம் விவகாரம் ஆவதை உணர்ந்த எச்.ராஜா அச்சமடைந்து தனது பேஸ்புக் பதிவை இன்று மதியம் நீக்கிவிட்டார். இதனால் தற்காலிகமாக இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. பெரியார் பற்றி பேசியதும் தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் கருத்துபாகுபாடை மறந்து ஒரே குரலில் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications