‛‛புது கட்சி தொடங்கிய ஹரி நாடார்’’.. பெயர் என்ன தெரியுமா? ‛ராக்கெட்’ ராஜாவை எதிர்த்து அரசியல் களம்
தென்காசி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாளான இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு ஹரிநாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதன்பிறகு அவர் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து ஹரி நாடாரை, ராக்கெட் ராஜா நீக்கிய நிலையில் அவருக்கு போட்டியாக புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
ஹரி நாடார்.. கழுத்து நிறைய தங்க நகைகள், கைகளில் தங்க காப்புகள் அணிந்து தமிழகத்தில் வலம் வருவதை நாம் பார்த்திருப்போம். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளம். நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர் ‛ராக்கெட் ராஜா'வின் பனக்காட்டுப்படைப் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பனங்காட்டுப்படைப் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று 3ம் இடம் பிடித்தார்.
இந்த தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பிஎச் மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 ஓட்டுகள் பெற்று 3,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் மனோஜ் பாண்டியனிடம் தோற்றார். பூங்கோதை ஆலடி அருணாவின் இந்த தோல்விக்கு காரணமாக இருந்தவர் ஹரி நாடார்.
ஏனென்றால் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹெல்மெட் சின்னத்தில் களமிறங்கிய ஹரிநாடார் 37,727 ஓட்டுகள் பெற்றார். இவர் நாடார் சமுதாய மக்களின் ஓட்டுகளை பிரித்ததால் தான் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியடைந்தார். அதன்பிறகு ஹரி நாடார் பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதாவது பனங்காட்டுப் படை கட்சியின் தலைவரான ‛ராக்கெட்' ராஜாவுக்கும், ஹரி நாடாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஹரி நாடாரின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்த ராக்கெட் ராஜா, அவரை பனங்காட்டுப்படை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இந்த உத்தரவு என்பது 2022 ஜனவரி 22ம் தேதி வெளியானது.
இதையடுத்து ஹரி நாடார் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தான் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஹரி நாடார் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பிறகு அவர் தனது புதிய அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி அவர், ‛‛சத்திரிய சான்றோர் படை'' என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளேன். இதற்கான சின்னம், கொடி பின்னர் அறிவிக்கப்படும். மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிக்கு தயாராகி வருகிறேன். ஆலங்குளத்தில் கட்சி பெயரை அறிவித்துள்ள நான் விரைவில் கொடி, சின்னத்தை இங்கு அறிவிப்பேன்'' என தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டு 3ம் இடம் பிடித்த நிலையில் அந்த ஊரில் வைத்தே ஹரிநாடார் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை குறிவைத்து அவர் இந்த அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். தமிழகத்தில் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றன. அதுபோல் பிற மாவட்டங்களில் கணிசமான அளவில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் மாவட்டங்களை மையமாக வைத்து ஹரி நாடார் அரசியல் செய்ய திட்டமிட்டு புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications